எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான் ஆவேச பேச்சு

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார்.

சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அவர் ஓமலூர் அருகே உள்ள சட்டூர், தும்பிபாடி, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவருடன் சமூக ஆர்வலர் பியூஷ்மானுஷ் உடனிருந்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!