வெனிசூலா முழுவதும் மின்சாரம் துண்டிப்பு:15 நோயாளர்கள் பரிதாப பலி

வெனிசூலாவில் மின் இணைப்பு துண்டிப்பால் சிகிச்சை பெற முடியாமல் 15 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டுகிறார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் என பலர் பாதிக்கட்டடுள்ளார்கள்.

இந்த நிலையில்,வைத்தியசாலையில் மின்சாரம் இல்லாததால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெறமுடியாமல் 2 நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வருவதாகவும், மின் வினியோகத்தில் இதே நிலை நீடித்தால் அவர்கள் உயிர் இழப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார உரிமைகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!