எனது மகன் விருப்பப் படி இனிமேல் மது அருந்த மாட்டேன்” என்று தற்கொலை செய்துகொண்ட மாணவர் தினேஷின் தந்தை உருக்கமாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு- நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமியின் 17 வயதான மகன் தினேஷ் நல்லசிவன் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டமை தெரியவந்தது. அவர் எழுதியிருந்த கடிதத்தில் தான் இறந்த பிறகாவது மதுப்பழக்கத்தை கைவிடுமாறு தந்தைக்கு உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். மதுக்கடைகளை மூட மத்திய–மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினேஷ் நல்லசிவனின் உடல் நேற்று முன்தினம் மாலை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாடசாமி தனது மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். எனது குடிப்பழக்கத்தால் மகனை இழுந்துவிட்டேனே என்று கூறி கதறித் துடித்தார்.
பின்னர் மாடசாமி உருக்கமாக கூறியதாவது:-
“எனது மகன் குடிப்பழக் கத்தை கைவிடும்படி என்னிடம் எவ்வளவோ கேட்டுக்கொண்டான். ஆனால் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இப்போது வைத்தியராக வேண்டிய எனது மகனை இழந்து தவிக்கிறேன். எனது சகோதரர்கள் நல்ல முறையில் அவனைப் படிக்கவைத்தனர். அவன் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும். அவனது விருப்பப்படி நான் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன். இனிமேல் குடிக்கமாட்டேன். அப்போது தான் அவனது ஆத்மா சாந்தியடையும்.
என்னைப் பார்த்து மது அருந்துகின்றவர்கள் திருந்த வேண்டும். குடும்பத்தை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!