தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகள், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூட்டு எதி।ரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. எதிரணியின் பக்கமிருந்து எப்போதுமே இனவாதக்கூச்சல்களே எழுவதால் இவர்களின் கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
தென்பகுதி அரசியல்வாதிகளது
எழுந்தமானமான குற்றச்சாட்டுக்கள்
தென்பகுதி அரசியல்வாதிகள் பழைய அரசியல் சம்பிரதாயங்களிலிருந்து சிறிதளவாவது மாறி யுள்ளதாகத் தெரியவில்லை. பண்டாரநாயக்க போன்றவர்கள் விதைத்த இனவாத வித்துக்கள் முற்றாக அழிந்து விடாது இன்னமும் இனவாதிகள் மனங்களில் நீண்டு நிலைத்துள்ளன.
தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்ப்பதற்காக சம்பந்தனும், ரணிலும் இரகசிய ஒப்பந்தமொன்றைச் செய்ததாக கூட்டு எதிரணித் தரப்பினரால் ஆரம்பத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டு வந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துரைத்தார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க தமிழர்கள் எதிர்கொள்கின்ற முக்கியமான பிரச்சினை கள் சிலவற்றுக்குத் தாம் தீர்வு காண்பதாகத் தெரிவித்து ஒரு கடிதத்தை சம்பந்தனுக்கு அனுப்பி வைத்ததாக வேறொரு பக்கத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ரணில் தரப்பில் இருந்து இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கூட்டு எதிரணியினர் வழக்கம் போன்று இனவாதச் சிந்தனையுடன் குட்டையைக் குழப்புவதைக் காண முடிகின்றது.
தமிழ்மக்கள்சகல உரிமைகளையும்
அனுபவிக்க உருத்துடையவர்கள்
தமிழர்கள் இந்த நாட்டில் சகல உரிமைகளையும் கொண்டவர்களாக வாழ்வதற்குத் தகுதி படைத்தவர்கள் என்பது வரலாறு கூறகின்ற உண்மையாகும்.ஆனால் இனவாதிகள் பெளத்த மதத் தலைவர்களின் உதவியுடன் வரலாற்றைத் திரித்துக் கூறுவதற்கு முற்படுகின்றனர். தமிழர்கள் இடையில் வந்து குடியேறியவர்களெனப் பொய் உரைக்கின்றனர். பெரும்பான்மையின மக்கள் இவர்கள் கூறுவதைச் சரியென ஒப்புக்கொள்வதால் இன ஐக்கியம் மேலும் பாதிக்கப்படுகின்றது.
உண்மையில் தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தன்தான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் எதிரணியொன்று இதைக் கொண்டு வருவதும், எதிர்க்கட்சி அதை எதிர்ப்பதும், இந்த நாட்டில் மட்டுமே நிகழக்கூடிய அரசியல் அற்புதங்கள். இதை ஏற்படுத்தி வைத்தவர்கள் இனவாதிகளேயென்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தமது எண்ணத்தை நிறைவேறவிடாது தடுப்பதற்கு உதவிய கூட்டமைப்பின் மீது எதிரணியினர் வன்மம் பாராட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் கூட்டமைப்பின் பக்கம் உள்ள நியாயத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொடிய இனப் போர் ஓய்ந்ததன் பின்னரும், தமிழர்கள் நிம்மதியாக வாழவில்லையென்றால் அதற்குக் காரணம் என்ன?
இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் இனவாதிகளே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.அரசு தமிழர்களுக்கு எதையாவது செய்வதற்கு முற்படும்போது அதற்கு முட்டுக்கட்டை இடுபவர்கள் இந்த இனவாதிகள்தான். அரசுக்கு மனம் இருந்தாலும் , அதைச் செய்யவிடாமல் எதிரணியினர் தடுத்து விடுவதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர்.
இந்த நாட்டின் வளர்ச்சி சுபீட்சம்,மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தும் இனப் பிரச்சினைக்கான தீர்விலேயே தங்கியுள்ளன. இதில் குழப்பம் ஏற்படும் போது நாடே குழம்பி விடுகின்றது.
சம்பந்தனது நிலைப்பாடு குறித்து
முரண்பட்ட கருத்துக்கள்
வெளியிடும் இனவாதிகள்
சம்பந்தனின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும், தமிழர்களுக்கெனத் தனிநாடு என்பது உருவாகிவிடும் என்பதில் எவ்வித அர்த்தமுமில்லை. விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிப்போராடிய காலம் ஒன்றிருந்தது. அவர்களுக்குப் பின்னர் தனிநாடு தொடர்பாக எவருமே பேசுவதில்லை. ஒரே நாட்டுக்குள் சகல அதிகாரங்களையும் கொண்ட கூட்டாட்சி பற்றியே தமிழ்த் தலைமை பேசுகின்றது.
சம்பந்தன் ஏற்கனவே இதைத் தெளிவாகக் கூறிவிட்டார். விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் மக்களின் ஆதரவை ஈட்டிக்கொள்ளும் நோக்கில் வாயில் வந்ததையெல்லாம் கூறுகிறார் கள். அரசியல் ரீதியில் ஒருபோதுமே நிறைவேற்றிட இயலாத காரியங்கள் தொடர்பாகவும் பேசுகின்றனர். இவர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாகத் தமிழர்களின் கருத்தெனக் கொள்ள முடியாது.
சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, தம்மில் ஒருவரை அந்தப்பதவிக்கு நியாயமிப்பதே கூட்டு எதிரணியின் திட்டமாகும்.
இதற்காகவே சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் தலைமை அமைச்சருக்கு எதிராகக்கொண்டுவரப்பட்டு தோல்வியில் முடிந்த தீர்மானம் போன்று இதுவும் தோல்வியிலேயே முடியும் என்பதை உணர முடிந்தது.
இந்த நாட்டின் மீது பன்னாட்டுச் சமூகத்தின் பார்வை நல் அக்கறையுடன் வீழ்ந்திருக்கிறது என்பதை எதிரணியினர் ஒருகணம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும், மீண்டும் மேற்கொள்ளும் தவறுகள், தமிழர்களுக்குச் சாதகமானவையாகவே ஆகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!