ஆளுநருக்கு ‘செக்’ வைத்தார் ஸ்ரீகாந்தா- காப்பாற்றினார் மணிவண்ணன்!

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியிருந்த நிலையில்,அவரை நீதிமன்றில் முன்னிலையாக வேண்டாமென கிளிநொச்சி நீதிவான் எம்.கணேசராஜா நேற்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மணிவண்ணனின் வேண்டுகோளின் பேரில் நீதிவான் இக்கட்டளையை வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாக கூறப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது சம்பவம் தொடர்பான தண்டனை இன்று வழங்கப்படும் என்றும், குறித்த உணவகத்தை மீண்டும் திறக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் வந்து நடந்த கொண்ட விடயம் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதன்படி வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுமாறு வடக்கு ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த வழக்கில் ஆளுநரை மன்றில் முன்னிலையாவதில் இருந்து தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளருக்கு, உளவியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆளுநர் நீதிமன்றில் முன்னிலையாகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளர் கோரிய போதிலும், சட்டத்தரணி அதனை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூலம், ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. சட்டத்தரணி வி.மணிவண்ணனே, ஆளுநருக்கு விலக்களிக்கும் கட்டளையை நீதிவானிடம் பெற்றதாக கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!