ஜனாதிபதி முறைமையினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து! – சுமந்திரன்

தற்போது நடைமுறையில் உள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என வாக்குறுதி வழங்கி விட்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார். அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டாலும் முழுமையாக அது நீக்கப்படவில்லை.

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும். ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது அதை வெளிப்படையாகக் கண்டோம். எனவே, ஜனநாயகத்தை விரும்பும் – குரல் கொடுக்கும் அனைவரும் இந்த விடயத்தில் ஓரணியில் திரள வேண்டும்.

ஜே.வி.பியால் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவளிக்கப்படும் என நாம் அறிவித்துள்ளோம். இந்தச் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் தேவைப்படாது.

இது தொடர்பாக ஜே.வி.பியுடனும் சிவில் அமைப்புகளுடனும் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சு ஏனைய தரப்புகளுடனும் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!