பெண் பொறியாளரை கொலை செய்து பெட்டியில் வைத்து உடல் வீச்சு!

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர். இவர்களின் காதல் விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியும். அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார். இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ந் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி 7-ந் தேதி திரும்பி வரவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார், பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர். சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் பெண் என்ஜினீயரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர். அங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் போலீசில் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!