யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பாரிய சோதனைகளை முன்னெடுத்தனர்.
நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தேடுதலின் போது, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம், மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான சில பதாதைகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ அதிகாரியால் எழுத்து மூல ஆவணம் ஒன்று காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது,
இதன் அடிப்படையில், கோப்பாய் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள் இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்னிரவு யாழ். நீதிவானின் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதேவேளை, நேற்று கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்களை பிணையில் விடுவிக்க நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் தேவை என்றும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உடனடியாக கொழும்பு சென்று சட்டமா அதிபரைச் சந்தித்து மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரவுள்ளதாக கூறினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!