மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா!!

நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி , வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று நண்பகல் மன்னிப்புக் கோரினார் என அறியமுடிகிறது.

அமைச்சரவை சந்திப்பு நிறைவடைந்த பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகா கடந்த 3 ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அரச தலைவரை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இது தொடர்பில் அரச தலைவர் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலே அவர் மன்னிப்புக் கோரினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.