1953 ஆம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், தென் கொரியாவுக்குள் நுழைந்த வடகொரியாவின் முதலாவது அதிபர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது? இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை எப்போது ஆரம்பித்தது? 1948ஆம் ஆண்டுவரை ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிய நேரிட்டது? நீண்ட மற்றும் சிக்கலான இந்த வரலாறு, இரண்டாம் உலகப் போரின் முடிவில் தொடங்கியது.
கொரியப் போரின் ஆரம்பம்?
மேற்குலக நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் என்பவற்றுக்கு இடையே நடந்த பனிப்போரின் நேரடி விளைவாக, 1950ஆம் ஆண்டுகளில் கொரியத் தீபகற்பத்தில் போர் வெடித்தது. ஒரே நாடாக இருந்த கொரியாவை, 1910 முதல் இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை ஜப்பான் ஆண்டது. போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததை சிறந்த வாய்ப்பாகப் கருதிய சோவியத் ஒன்றியம், கொரியாவுக்குள் நுழைந்தது.
1948ஆம் ஆண்டு கொரியாவைப் பிரிக்க சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. சோவியத் ஒன்றியம் வட கொரியாவையும், அமெரிக்கா தென் கொரியாவையும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.
வடகொரியாவில் ஒரு கம்யூனிச சர்வாதிகாரத்தை நிறுவிய சோவியத் ஒன்றியம், முன்னாள் கெரில்லா படை வீரரான கிம் இல்-சூங்கிடம் (கிம் ேஜாங்-உன்னின் தாத்தா) அதிகாரத்தை ஒப்படைத்தது. ஜனநாயக தேர்தல் நடந்த தென்கொரியாவில், சைங்மேன் ரீ அந்த நாட்டின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் 1949ஆம் ஆண்டில் கொரியாவை விட்டு வெளியேறின.
ஒரு வருடம் கழித்து, எதிர்பாராத விதமாக தென் கொரியா மீது கிம் இல்-சூங் தாக்குதல் நடத்தினார். ஒரு ஐக்கியப்பட்ட கம்யூனிச கொரியாவை உருவாக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது. வடகொரியாவிடம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. இதற்கு அவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
தென்கொரியாவுக்கு உதவுவதற்காக அமெரிக்கப் படையும் வந்தது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 14 ஐ.நா உறுப்பு நாடுகளிடம் இருந்தும் தென்கொரியாவுக்கு ஆதரவாக படைகள் வந்தன.
போரை நிறுத்த அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என அப்போதைய அமெரிக்க அதிபர் ட்வைட் ஐசனோவர் மிரட்டியதால், போர் நிறுத்த ஒப்பந்தம் 1953ஆம் ஆண்டில் கையெழுத்தானது. அதே ஆண்டில் சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் சாவும் போர் நிறுத்தத்துக்குப் பங்களித்தது.
இறுதி அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காக எட்டப்பட்ட இந்த உடன்படிக்கையால், அப்போது போர் ஓய்ந்தது. ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை. அதனால்தான் இரண்டு கொரியத் தலைவர்களுக்கிடையிலான அண்மைய சந்திப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டு நாடுகளும்
எப்படி வேறுபடுகின்றன?
தென் கொரியாவிலும் வடகொரியாவிலும் தினசரி வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்க முடியாது. மேற்கு நாடுகளது படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென்கொரியா, முதலாளித்துவ தத்துவத்தை ஏற்றுக்கொண்டது. ஆசியாவின் மிகச் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகத் தென் கொரியா வளர்ந்துள்ளது.
1960களில் அரசால் ஊக்குவிக்கப்பட்ட தொழிற்துறையால், சாம்சங், ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனங்களும் உருவாகின. தென்கொரிய கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது. தென்கொரிய கலைஞர்கள் தயாரித்த நாடகங்கள் மிகவும் பிரபலமாயின. நாட்டின் 48 மில்லியன் மக்கள் தொகையில், 45 மில்லியன் மக்களுக்கு, அதிக வேகமான வயர்லெஸ் இணையம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான பொருள்களும் இங்கு மக்களுக்கு தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.
வடகொரியாவைப் பற்றி
தென்கொரிய மக்களிடம்
என்ன கற்பிக்கப்படுகிறது?
‘‘வட கொரியா எமது முக்கிய எதிரி நாடு என்றும், அதே சமயம் எமது சக நாடு என்றும் எங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது’’ என்கிறார் தென்கொரிய யு டியூப் பதிவாளர் பில்லி. வடகொரியா ஒரு கம்யூனிச நாடு. ஆனால், முதலாளித்துவம் அந்த நாட்டில் ஊடுருவி வருகிறது.
வடகொரியாவில் வாங்குவதற்குப் பொருள்கள் உள்ளன. ஆனால், அது பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலான வடகொரிய மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் உயர் தலைவரே எமக்கு முக்கியம் என அந்த நாட்டுக் குடிமக்க ளுக்குச் சிறுவயது முதலே கற்பிக்கப்படுகிறது. அத்துடன் தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் மற்றும் மேற்குலக நாடுகளும் தீயவை என மக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
முறைகேடுகள்
சித்திரவதை, பாலியல் துர்நடத்தை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் பட்டினி என மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்க ளைச் செய்ததாக 2014ஆம் ஆண்டு வட கொரியா மீது ஐ.நா. குழு குற்றம் சாட்டியது. இந்த நாட்டின் உயர் தலைவர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் ஐ.நா பரிந்துரைத்தது.
கிம் வம்சம்
வடகொரியாவின் முதல் மற்றும் நீண்டகால தலைவராக இருந்தவர் கிம் இரண்டாம் சங். ‘தன்னுணர்வு’ என்ற சுய நம்பிக்கைத் தத்துவத்தை அந்த நாட்டுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். இடைவிடாத பரப்புரைகளின் மூலம், தன்னைச் சுற்றி தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டதினால், எதிரிகளே இல்லாமல் 46 ஆண்டுகள் ஆட்சி செய்தார் கிம் இரண்டாம் சங். அப்படி எதிரிகள் இருந்தால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்தப் பாரம்பரியத்தை, தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் கிம் ஜோங்-உன்னும் கடைப்பிடித்தார். கிம் இரண்டாம் சங், அவரது மகனான கிம் ஜோங்-இல்லை 1980களில் கொரிய தொழிலாளர்கள் கட்சி மற்றும் ராணுவத்தில் பெரிய பொறுப்புகளை அளித்து பதவி உயர்வு பெற வைத்தார். இந்த நிலையில், தலைவர் பதவியை கிம் ஜோங்-இல் எடுத்து கொள்வார் என தெரிய வந்தது.
1994ஆம் ஆண்டு கிம் இரண்டாம் சங் உயிரிழந்த பிறகு, அவருக்கு ‘குடியரசின் நிரந்தர அதிபர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும், அந்நாட்டின் கடவுள் போல அவர் கொண்டாடப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த கிம் ஜோங்-இல், உலகின் முதல் பரம்பரை கம்யூனிச நாடாக வட கொரியாவை ஆக்கினார்.
அணு ஆயுதங்கள்
கிம் ஜோங் இல்லின் ஆட்சியில் வடகொரியாவின் பொருளாதார நிலை மோசமடைந்து, அரசியல் எதிர்ப்பாளர்கள் அதிகரித்தனர். மேலும், அவர் நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பெருக்கினார். அவர் 2011ஆம் ஆண்டு உயிரிழந்த பிறகு கிம் ஜோங் உன் இதனைத் தொடர்ந்தார்.
சமீப மாதங்களில் தென் கொரியாவுடன் அவர் வைத்துள்ள உறவுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அமெரிக்கா மற்றும் ஐ.நா விதித்த அதிக பொருளாதார தடைகள்தான் என சிலர் குறிப்பிடுகின்றனர்.
அணு ஆயுதங்கள் வடிவமைப்பில்தான் வல்லமை பெற்று விட்டதாக வடகொரியா கூறுகிறது. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பானது, கிம் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து வெளிவந்துள்ளது. கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற இடமாக மாற்ற தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் சேர்ந்து பணிபுரிய போவதாக வடகொரிய அதிபர் கூறுகிறார்.
ஆனால் இது எப்படிச் சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ஆய்வாளர்கள் இது குறித்து சந்தேகிக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
அணுஆயுத சக்தி கொண்ட அமெரிக்கா, தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளதை வடகொரியா முக்கிய பிரச்சனையாகக் கருதும். இரண்டாவது காரணம்: இதே போன்ற ஒப்பந்தங்கள் வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையே போடப்பட்டு, வடகொரியா அதனை மீறியதன் காரணமாக ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
கிம்–மூன் சந்திப்பை
கொரியப் மக்கள்
எப்படிப் பார்க்கிறார்கள்?
சியோலில் உள்ள யு டியூப் பதிவாளர் கொரியன் பில்லி கூறுகையில், ‘‘இருநாட்டு தலைவர்களும் அமைதி குறித்து பேசுவதைப் பார்க்கும்போது, உணர்ச்சிகரமாக இருந்தது. ஏனெனில் வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே சுமுகமான உறவையே கொரியர்கள் எதிர்பார்த்தனர். எதிர்காலத்தில் நான் வட கொரியாவுக்கு பயணம் செல்ல முடியும் என்ற அளவிற்கு கற்பனை செய்ய தொடங்கி விட்டேன். வட கொரியாவிற்கு சென்று அந்த நாட்டு மக்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை நீண்ட நாள்களாக தென்கொரியர்களிடம் உண்டு’’ என்கிறார் அவர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!