கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த தொடருந்தில் பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொடருந்து உத்தியோகத்தர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்தில் தமிழ்க் குடும்பப் பெண் ஒருவர் வவுனியா தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தார்.
தொடருந்தில் மக்கள் கூட்டம் அதிகமில்லாத நிலையில் சிட்டை பரிசோதிக்கும் ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணுடன் தகாது நடக்க முயற்சித்தார் என்று கூறப்படுகின்றது. அதை அவதானித்த ஏனையோர் அந்த ஊழியரிடம் அது தொடர்பில் கேள்வியெழுப்பினர். ஊழியர் அவர்களைத் தாக்க முயற்சித்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்களை அவர் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியதுடன், நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பொலிஸாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான்தான் பெரியவன் என்று அவர் மிரட்டியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரையும் மிரட்டி யுள்ளார்.
தொடருந்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை அடைந்ததும் இந்தச் சம்பவம் தொடர்பில் தொடருந்து நிலைய அதிபரிடம் பெண் முறையிட்டார். ஆதாரமாகக் காணொலியும் வழங்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஊழியரைக் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகநபரை நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தினர்.
சந்தேநபரைப் பிணையில் செல்ல அனுமதிப்பதற்குப் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. சந்தேகநபரை நிபந்தனையுட னான பிணையில் செல்ல நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!