நீதி தாமதிக்கப்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர்! – நாடாளுமன்றில் சுமந்திரன்

குற்றவியல் வழக்குகளில் நீதி தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“அதிகாரத்தில் இருப்பவர்கள் முக்கியமாக அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் உரியநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆட்சிமாற்றமொன்று ஏற்படும்வரை அவ்வாறானவர்களுக்கு எதிரான வழக்குகள் இழுத்தடிக்கப்படும். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நடவடிக்கைகள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஊழல், மோசடிகள் உயர்ந்த மட்டத்தில் ஈடுபடுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்.

முக்கியமான அரசியல் புள்ளிகள் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளை நடத்திமுடிப்பதற்கு ஐந்து வருட நாடாளுமன்றக் காலம் போதுமானதாக இல்லை. ஆட்சிமாற்றங்களின் பின்னர் மோசடிக்காரர்கள் நிரந்தரமாகத் தப்பிச்செல்லும் வரலாறும் காணப்படுகின்றது.ஊழல், மோசடிகள் தொடர்பான விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. துரதிர்ஷ்டவசமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களில் ஒரு வழக்கில் மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கும் தற்போது மேன்முறையீட்டுக்கு உட்பட்டுள்ளது.

பொதுவான சட்ட அடிப்படையின்கீழ் இரண்டு மேன்முறையீடுகளுக்கு அதாவது, மேலும் ஒரு தசாப்தத்துக்கு வழக்கை இழுத்துச்செல்ல முடியும்.துரிதமான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் வழக்குகள் காலதாமதமாக இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.

இருபது வருடங்கள் வழக்கு இழுபட்டுச் செல்லும் நிலைமையும் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த வழக்கைக் கூறமுடியும். 17 வருடங்களின் பின்னரே இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இந்து மதகுரு ஒருவரும், அவருடைய பாரியாரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.இதில் மதகுருவுக்கு 17 வருடங்களின் பின்னர் தண்டனை வழங்கப்பட, அவருடைய மனைவி 17 வருடங்களின் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதுவரை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் மனோநிலை பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். இது சட்டத்துறையில் காணப்படும் காலதாமதத்துக்கு சிறந்த உதாரணமாகும்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!