றிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது, விவாதிப்பது என்று முடிவு செய்யப்படவுள்ளது.

அதேவேளை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, மே 17ஆம் நாள் சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் சில தலைவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஐதேக உறுப்பினர்கள் சிலரும் கூட வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!