சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரவில்லை – சரத் பொன்சேகா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்புக் கோரவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த சரத் பொன்சேகா மற்றும் ஐதேக அமைச்சர்கள், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா,

“அண்மைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் முன்வைத்திருந்த திட்டம் ஒன்று தொடர்பாக, சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.

சந்திப்பின் போது, பிரச்சினைக்குரிய விவகாரங்கள் குறித்து ஊடகங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் வெளிப்படுத்துவதை விடட, தம்முடன் கலந்துரையாட முடியும் என்று சிறிலங்கா அதிபர் கூறினார்.

அதற்கு அப்பால், இதுபற்றி எந்தக் கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. மன்னிப்பும் கோரப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!