கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் வி‌ஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து குழந்தையை கொன்ற தாய்!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பால்ராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரூபினி (வயது 30). இவர்களுக்கு தேவிஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை தேவிஸ்ரீ சரவணம்பட்டி கரட்டு மேடு முருகன் கோவில் கிரிவலப்பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாய் ரூபினி தனது குழந்தையை காணவில்லை என அந்த பகுதிக்கு வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரூபினி கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் தமிழுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் ரூபினியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனக்கும் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தேவிஸ்ரீ என்று பெயர் வைத்தோம். இந்தநிலையில் எனக்கும், பால்ராஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எனது கணவர் என்னையும், குழந்தையையும் பிரிந்துசென்றார். எனவே நான் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தேன்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எனது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. நான் அந்த இணைப்பை துண்டித்து விட்டேன். மீண்டும் மீண்டும் அந்த எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனவே அழைப்பை ஏற்று பேசினேன். அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் தமிழ் என்று கூறினார். கணவரை பிரிந்து தனிமையில் வசித்த எனக்கு தமிழின் பேச்சு ஆறுதல் படுத்தும் வகையில் இருந்தது. அவரது பேச்சில் மயங்கிய நான் அடிக்கடி அவருடன் பேசி வந்தேன். பின்னர் நாங்கள் ஒருவரை, ஒருவர் அடிக்கடி நேரில் சந்தித்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தோம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்த போது தமிழ் என்னை தொடர்பு கொண்டார். அப்போது என்னிடம் நீ எதற்காக தனியாக வசிக்கிறாய்? குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு வா, நான் வீடு வாடகைக்கு எடுத்து தருகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் என கூறினார். இதனையடுத்து நான் குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு வந்தேன். பின்னர் நாங்கள் கணவன்-மனைவி என கூறி பல இடங்களில் வீடு தேடி அழைந்தோம். ஆனால் வீடு கிடைக்கவில்லை. இரவானதால் கரட்டுமேட்டில் உள்ள அரசு பள்ளியில் தங்கினோம்.

அப்போது நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்போது தேவிஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் குழந்தை இருந்தால் எங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தையை கொலை செய்வது என முடிவு செய்தோம். அதன்படி தமிழிடம் வி‌ஷம் வாங்கி வரும்படி கூறினேன். அவர் கடைக்கு சென்று வி‌ஷத்தை வாங்கி வந்தார். பின்னர் நான் வி‌ஷத்தை பிஸ்கட்டில் தடவி பாலில் கலந்து கொடுத்தேன்.

இதை சாப்பிட்ட குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது. இதனையடுத்து குழந்தையை எனது கள்ளக்காதலன் தமிழிடம் கொடுத்தேன். அப்போது குழந்தைக்கு உயிர் பிரியாமல் இருந்தது. பின்னர் தமிழ் குழந்தையை தனது கையால் தாக்கினார். அப்போது தேவிஸ்ரீ இறந்தாள். பின்னர் எங்கேயாவது கொண்டு வீசி விட்டு வரும்படி தமிழிடம் கூறினேன். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறினார். அதன் பின்னரும் அவர் வரவில்லை.

பின்னர் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது ஒன்றும் தெரியாதது போல தேவிஸ்ரீ போட்டோவை காண்பித்து எனது குழந்தையை காணவில்லை என கூறி நாடகமாடினேன். சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

இதனையடுத்து போலீசார் உல்லாசத்து இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ரூபினியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரூபினியின் கள்ளக்காதலன் தமிழ் (36) என்பவரை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!