ஆளுனர்கள் அரசியல் செய்யத் தேவையில்லை : துமிந்த

ஆளுனர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது. அத்தோடு ஊடகங்களுக்கு தேவையற்ற அநாவசிய கருத்துக்களை தெரிவிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அசாத்சாலி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் ஜனாதிபதி ஏன் இது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா,

ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமே உள்ளது. அதே போன்று பதவி நீக்கும் அதிகாரமும் அவருக்கே உள்ளது. எனவே இது தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி தான் எடுக்க வேண்டும். இதில் எம்மால் தலையிட முடியாது என்றார்.

இதன் போது ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தெரிவித்த அவர், எந்த சந்தர்ப்பத்திலும் ரிஷாத்தை பாதுகாக்க வேண்டிய தேவை சுதந்திர கட்சிக்கு கிடையாது. வாக்களிப்பது தொடர்பான தீர்மானத்தை இறுதி கட்டத்திலேயே வெளிப்படுத்துவோம். ஆனால் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!