புத்தளத்தினால் தட்டிப்பறிக்கப்படும் மன்னாரின் வாய்ப்புகள்!- செல்வம் எம்.பி கடிதம்

மன்னார் மாவட்ட பாடசாலைகள் பல தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது தொடர்பில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வட மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

‘மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் இன்றும் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த ஆசிரியர்களுக்குரிய சம்பளமும் அங்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததனால் அம் மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

நாட்டில் சுமுகமான சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரும் அப் பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து கல்வியை கற்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந் நிலையில் புத்தளத்தில் கற்கும் மாணவர்கள் பல வசதிகளுடன் கற்றலை மேற்கொண்டு மன்னார் மாவட்ட உயர் தரப்பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில் அவர்களும் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியிலேயே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மன்னாரிலேயே இருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் கடுமையான பாதிப்புக்களை எதிர் நோக்கி வருகின்றனர். புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்தினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில் இப் பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒரு தீர்மானம் வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் உயர்கல்வி கற்கின்ற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமையும் மன்னார் மாவட்ட மாணவர்களின் வளங்கள் புத்தளம் மாவட்டத்தினால் பயன்படுத்தப்படுகின்றமையும் மன்னார் மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே உடனடியாக கவனத்தில் கொண்டு இப் பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப்பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் செல்வம் அடைக்கலநாதன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!