எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், குறிப்பிட்ட ஆசிரியர்கள் சேலை அணிந்து வரவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளாரே தவிர, கபாயா அணிய வேண்டாமெனக் கூறவில்லை. அவரது கருத்தை அவரது காலப்பகுதியில் இலங்கையில் இருந்த முஸ்லிம் ஆடை சம்பந்தமான நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட ஒரு கருத்தாகத்தான் முஸ்லிம்கள் எடுத்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் நியாஸ் சீனி முகமத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
முஸ்லிம் ஆசிரியைகள் சாறிஅணியாது பாடசாலைக்கு ஹபாயா உடையில் வருவதற்கு ஆட்சேபனை தெரிவித்து கணிசமான மக்கள் தொகையை கொண்ட ஒரு கூட்டம் எதிர்ப்பு ஆர்பாட்ட மொன்றிலும் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்து கடமைக்கு செல்வதே அந்தப் பிரச்சினைக்கு தீர்வாகும்˜ என்று தெளிவற்ற ஒரு அறிக்கையை விடுத்ததன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலான ஒரு நிலைமையை அடைந்தது.
சம்பந்தனின் கூற்று, முஸ்லிம்களின் மார்க்கரீதியான ஆடைக்கு எதிரான கருத்தாகவே முஸ்லிம் மக்களில் சிலர் எடுத்துக்கொண்டுள்ளனர் என்று விளங்குகின்றது.
ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் ஒரு சமூகத்துக்கு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான சமுகங்களுக்கிடையில் மனிதர் என்ற வகையில் பிரச்சினைகள் எழுவதுண்டு. ஆகவே நான் அல்லது நம்மவர்கள் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பது மனித இனத்துக்கு மனிதன் செய்யும் பெரிய அநியயாம்.
பிரச்சினைகளைக் கதைத்துத் தீர்த்துக் கொள்வதில் இயற்கையான ஒரு நீதி கடைபிடிக்கப்பட வேண்டும். நீதி மட்டுமே தீர்வின் ஆரம்பமும் அடிப்படையுமாக இருத்தல் வேண்டும். இந்த நீதியை விளங்கிக் கொள்வதற்கு மனச்சாட்சி இருந்தால் போதுமானது.
இயற்கையான நீதியை விளங்கிக் கொள்வதற்கு ஒருவன் பேரறிஞராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த நாட்டில் படித்த அனுபவமிக்கவர்களும் தத்தமது மனச்சாட்சியைப் புரிந்து கொள்ளமுடியாதநிலை காணப்படுகிறது. இதுதான் இன்றைய சமூகங்களுகிடையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டமுடியாததற்கு அடிப்படை காரணம் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!