சேலத்தில் டெம்போ டிரைவர் அடித்துக்கொலை: கணவன்-மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்

சேலம் அம்மாப்பேட்டையில் டெம்போ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணவன், மனைவி உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த உடையாப்பட்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). டெம்போ டிரைவர்

இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சந்து கடையில் மது விற்பனை செய்யும் திலீப் என்பவரது வீட்டிற்கு சென்று மது பாட்டில்கள் வாங்கினார். அப்போது மீதி பணத்தை திலீப் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திலீப், அவரது மனைவி தேவி மற்றும் உறவினர்கள் சக்தி, ரமேஷ் ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாரை கடுமையாக தாக்கினர். மேலும் தடுக்க வந்த சதீஷ்குமாரின் தந்தை ராமசாமி, தாய் இந்திராணி ஆகியோரையும் தாக்கினர். இதில் நிலைகுலைந்த சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடையாப்பட்டியில் சதீஷ்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் திலீப்பின் வீடு மற்றும் அங்கிருந்த மது பாட்டில்களையும் அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

கொலையாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார். அந்த தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த திலீப், அவரது மனைவி தேவி மற்றும் உறவினர்கள் சக்தி, ரமேஷ் ஆகியோரை பிடித்தனர்.

அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் போது திலீப் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

சதீஷ்குமார் எனது வீட்டிற்கு மது பாட்டில்கள் வாங்க வந்தார். அப்போது தகராறு ஏற்பட்டதால் அவரை அங்கிருந்து செல்லுமாறு கண்டித்தேன். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். மேலும் எனது வீட்டில் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை எடுக்க முயற்சித்தார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நானும் எனது உறவினர்களும் சேர்ந்து அவரை தாக்கினோம். இதில் நிலைகுலைந்த அவர் திடீரென இறந்து விட்டார் என்று கூறி உள்ளார். மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!