சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் நாட்டிற்கு நல்லது – அஜித் பி. பெரேரா

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவாராக இருந்தால் நாட்டின் தலைமைத்துவத்தில் மாத்திரமின்றி கட்சியின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் தொடர்பிலும் வினவியப்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு அமைவாக முன்னெடுக்கபட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதுக்கான பிரதான நோக்கத்தை அடைந்துக்கொள்வதற்கு,விசாரணைகள் முறையாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

அதே சந்தர்ப்பத்தில் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலின் பின்னர் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும். அதேபோன்று ஆட்சியிலும் பாரிய மாற்றம் உருவாக்கப்படும். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்லை நடத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!