சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.

இந்த தெரிவுக்குழு முன்பாக தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவுக்கு முன்பாக, பாதுகாப்பு அதிகாரிகளை முன்னிலையாக கூடாது என உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

அத்துடன், தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு சபாநாயகருக்கும் அவர் அறிவித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்த சபாநாயகர், தெரிவுக்குழுவை நாடாளுமன்றமே அமைத்தது என்றும் நாடாளுமன்றமே அதனை நிறுத்த வேண்டுமே தவிர, அதனை நிறுத்தும் அதிகாரம் தனக்கு கிடையாது என்றும் பதிலளித்திருந்தார்.

அதேவேளை கடந்தவாரம் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் அமைச்சரவைக் கூட்டம் உள்ளிட்டவற்றை தான் புறக்கணிப்பேன் எனவும் எச்சரித்திருந்தார்.

ஆனாலும்,நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை இன்று நடைபெறும் என்று அதன் தலைவசர் ஆனந்த குமாரசிறி கூறியிருந்தார்.

இதனடிப்படையில் இன்றைய அமர்வில், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!