மொழி என்பது மக்களை ஒன்றிணைக்கும் முக்கிய ஊடகம் எனக் கொள்ளப்படும். இந்த உண்மை சகல இனத்தவர்களுக்கும் பொதுவானதொன்று. மனிதர்கள் எந்தவொரு மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும், அதன் மூலம் அவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே யதார்த்தம். மொழி தொடர்பான சமூகத்தின் பொது நோக்கும் அதுவேயாகும். ஆனால் நாகரீகமடைந்த சமூகம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தில் மொழி தொடர்பான அந்தப் பொது மதிப்பை மாற்றி யமைத்துப் பெரும் அழிவுகளுக்கு வழி வகுத்தவர்கள் மொழியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகளே ஆவர்.
ஒரு இனத்தின் மொழியை இனத்தின் அடையாளமாக ஆக்கி
அரசியல் செய்தோர்
இத்தகைய அழிவுகள் உச்சநிலையடைந்த சம்பவமாக அமைந்தது, மொழியை இனத்தின் அடையாளமாக முன்னிலைப்படுத்திய அரசியல், நாட்டு மக்கள் மத்தியில் உருவானதை அடுத்தேயாகும். இதன் காரணமாகவே, விசேடமாக இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் முகம் கொடுக்க நேர்ந்துள்ள பலாபலன்களால் பாதிக்கப்படுவது, நாட்டின் இன்றைய தலைமுறையினரே. அதுமட்டுமன்றி, எதிர்காலப் பரம்பரையும் இந்தப் பயங்கர நிலையை அனுபவிக்க நேர்வதைத் தடுத்திட இயலாது போகும். இன்றைய காலகட்டத்தில், மொழிகளை இனவாத மோதல்களுக்கான குறியீடாகப் பயன்படுத்த சில தரப்பினர்கள் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம், முன்னைய காலம் தொட்டு இன்றுவரை அரசியலும் மொழியு।ம் அரசியலின் வலுவான துரும்புகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததனாலேயே ஆகும்.
இலங்கை அன்னியர் ஆட்சிக்கு உட்பட்டதன் பின்னர், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கையர்களை அவர்களது இன மற்றும் மத அடிப்படையில் மலைநாட்டு மற்றும் கரையோரப் பிரதேசத்தவர்கள் என்ற ரீதியில் வேறுபடுத்தி நிர்வகித்தமை, அத்தகைய நடைமுறை அவர்களது நிர்வாகச் செயற்பாடுகளை இலகுவாக்கியதன் அடிப்படையிலேயே ஆகும். இலங்கையர்கள் ஒன்றிணைந்து செயற்படும்வரை, தம்மால் இலங்கையை முறைப்படியாக வும், இலகுவாகவும் நிர்வகிக்க இயலாதென்பதை அந்த வேளைய ஆங்கிலேய நிர்வாகத் தரப்பினர் தௌிவாக உணர்ந்திருந்தனர். பிரித்தாளும் தந்திரம் அவர்களது நிர்வாக நடைமுறையின் முக்கிய அம்சமொன்றாக கடைக்கொள்ளப்பட்டு வந்தது. 1832ஆம் ஆண்டளவில் ‘கோல்புறூக்’ என்பவரது பரிந்துரைகளின்படி அந்த நடைமுறை மேலும் பலமிக்க நிலையை அடைந்தது.
பிரித்தாளும் தந்திரத்துடன் அரசியல் செய்த ஆங்கிலேயர்கள்
ஆங்கிலேயர்களது நிர்வாகக் கட்டமைப்புக் குறித்துத் தெரிந்து கொண்டிருந்த சிங்கள, தமிழ், முஸ்லீம்கள், மலேயர்கள் மற்றும் பறங்கியர் ஆகிய இனத்தவர்களது கூட்டிணைவுடன் ஒரு அரசியல் அமைப்பு என்ற ரீதியில் 1918ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இலங்கை தேசிய சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
சாத்வீக வழியில் நாட்டுக்குச் சுதந்திரம் ஈட்டிக் கொள்வதே இந்த அமைப்பின் முக்கிய கொள்கையாக அமைந்தது. ஆனால் இந்த ஒன்றிணைவு நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை. 1921ஆம் ஆண்டில் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கை தேசிய சங்கத்திலிருந்து வௌியேறி, தமிழர் மகாசபை என்ற பெயரில் தமிழ் இனத்தவர்களுக்காக தனியான அமைப்பொன்றை நிறுவினார்.
அதே சமயம் இலங்கை தேசிய சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகச் செயற்பட்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகாவும் இலங்கை தேசிய சங்கத்தினின்றும் வௌியேறி, 1934ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிங்கள மகாசபை என்ற பெயரில் அமைப்பொன்றை நிறுவினார். சிங்கள மக்களது ஆதரவை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் குறித்த சிங்கள மகாசபை அமைக்கப்பட்டது.
அதேவேளை அந்தவேளையில் இலங்கையில் வாழ்ந்து வந்த கேர்ணல் டி.வை.றைற் என்ற ஐரோப்பிய இனத்தவரது தலைமையிலான ஐரோப்பிய சங்கத்தில் நாட்டின் ஐரோப்பிய இனத்தவர்கள் இணைந்து கொண்டனர். இலங்கையிலிருந்து மலாயர் மற்றும் முஸ்லீம் இனத்தவர்கள் ரி.பி.ஜயாவின் தலைமையில் ஒன்றிணைத்திருந்தனர். மேற்குறிப்பிட்ட அமைப்புக்களது அடிப்படைக் கொள்கை, ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் அந்தந்த இனங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைதாங்க வேண்டும் என்ற விதத்தில் அமைந்திருந்தது.
1943ஆம் ஆண்டில் அரச நிர்ணய சபையில் களனித்தொகுதி உறுப்பினர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சிங்கள மொழியை அரச கரும மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமெனப் பிரேரணையொன்றை முன்வைத்தார். அது நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக்கருதி, பின்னர் தமிழ் மொழியையும் அதில் இணைத்துக் கொள்வதற்கான திருத்தமொன்றையும் ஜே.ஆர் அந்தப் பிரேரணையில் உள்ளடக்கியிருந்தார்.
இனவாத அடிப்படையில்தோற்றம் பெற்ற அரசியல் கட்சிகள்
1944ஆம் ஆண்டளவில் இனவாதத்தை முன்னிலைப்படுத்திய அரசியல் கட்சிகள் குறிப்பாக, வடபகுதியை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றன. ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்ப டுத்திய அரசியல் தலைமைகளாக ஏற்கப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகிய இருவரும் இணைந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினர். தாம் நாட்டின் வடபகுதித் தமிழ் மக்களுக்காகவே காங்கிரஸ் கட்சியை உருவாக்கியதாக சோல்பரி ஆணைக்குழுமுன் னிலையில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் சாட்சியளித்ததன் மூலம் இது வௌிப்படுத்தப்பட்டது.
அரசமைப்புப் புனரமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முக்கிய கோரிக்கையாக ஆணைக்குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனைச் சோல்பரி ஆணைக்குழு நிராகரித்ததையடுத்து ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அந்த ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை செயலிழந்து போயிற்று. இதன்மூலம் தாம் பயனடையத் திட்டமிட்ட, அரசியல் சூட்சுமம் கைவரப்பெற்ற முதலாவது தலைமை அமைச்சரான டீ.எஸ்.சேனநாயக, ஏதோ வகையில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் நிலைப்பாட்டை மாற்றுவித்து, அவரைத் தமது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டதன் மூலம் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை சூட்சுமமான விதத்தில் கைவிடச் செய்வதில் வெற்றிகண்டார்.
மீண்டும் இலங்கை அரசியலில் மொழி என்பதை ஒரு ஆயுதமாக இணைத்தவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆவார். தமிழ் மொழியையும் அரசகரும மொழியாக்கும் பிரச்சினையை முன்வைத்து தமிழர் மகாசபையிலிருந்து வௌியேறிய செல்வநாயகம், 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதியன்று சமஷ்டிக்கட்சியை ஆரம்பித்ததன் பின்னர் அதனை மேலும் பலப்படுத்தும் விதத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் இனவாத அரசியல் கட்சியாக அதனை உருவாக்கினார். அதற்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி நாட்டின் வடபகுதி முழுவதிலும் இனவாதப் பரப்புரைகளை அந்தக் கட்சி முன்னெடுத்தது. ஒரு சில அரசியல் விமர்சகர்களது கருத்துப்படி தமிழீழக் கோரிக்கையி।ன் ஆரம்பகர்த்தாவாக செல்வநாயகமே விளங்கினார்.
சிங்கள மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்த சிங்கள அரசியல் வாதிகள்
1956ஆம் ஆண்டில் சிங்கள மொழியே தென்பகுதி அரசியல்வாதிகளது அரசியல் பிரபல்யம் தேடிக்கொள்வதற்கான துருப்புச் சீட்டாக அமைந்தது. அந்த வேளையில் ஐ.தே.கட்சியினின்றும் வௌியேறியிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக, தம்மால் உருவாக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் சிங்களமொழியே நாட்டின் அரசகரும மொழியென்ற பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டதுடன், ஐ.தே.கட்சியும் அதுவரை அரசகரும மொழி குறித்துத் தான் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாட்டு க்கு முரணான வகையில், சிங்களம் மட்டுமே அரசகருமமொழியென்ற கொள்கை நிலைப்பாட்டுக்குத் தன்னை மாற்றிக் கொண்டது.
1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தமது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஈட்டிய வெற்றியையடுத்து அரசை நிறுவிய பண்டாரநாயக, 1956ஆண்டு ஜீன்மாதம் 15ஆம் திகதியன்று சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகருமமொழி என்ற சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டார். அதனையடுத்து நாட்டில் உருவான இனங்களுக்கு இடையேயான இனவாதக் குழப்பங்கள் நாட்டின் சகல இன மக்கள் மத்தியிலும் அமைதியின்மையைத் தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி, பண்டாரநாயகவின் அமைச்சரவையில் ஒரு தமிழராவது அமைச்சராக நிய மிக்கப்படாமை சிறுபான்மை இன மக்களது மனதில் சந்தேகத்தை உருவாக்கக் காரணமாகியது.
சிங்கள மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்திய தையொட்டி நாட்டில் தலைதூக்கிய குழப்பங்களுக்கு முகம்கொடுக்க இயலாத நிலையில் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஓராண்டு காலத்துக்குப் பின்போடுவதாக பண்டாரநாயக்க அறிவித்தார். அதேவேளை வாகனங்களுக்கு சிங்கள ஸ்ரீ எழுத்தைப் பொறிப்பது தொடர்பான அரசின் முடிவுக்கு எதிரான குழப்பங்கள் உச்சமடைந்த தமிழ்ப்பகுதிகளில் சிங்கள எழுத்துக்கள் மீது தார்பூசிச் சேதப்படுத்துவதும், சிங்களப் பிரதேசங்களில் தமிழ் எழுத்துக்கள் மீது தார்பூசிச் சேதப்படுத்துவதுமென குழப்பங்கள் மோதல்களாக உருமாறின.
சிங்கள ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தலைமைகள்
செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பயனேதும் விளைவிக்கவில்லை
நாடளாவிய ரீதியில் தீவிரமாக நிலவிய மொழிப்பிரச்சினையை முன்னிட்டு இடம்பெற்ற மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தலைமை அமைச்சர் பண்டாரநாயக 1957 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்தார். அவற்றின் பலனாக இனங்கள் மத்தியில் புரிந்துணர்வையும், நட்புறவையும் பேணிக்காக்கும் விதத்தில் குறிப்பிட்ட இரு தலைவர்கள் மத்தியிலும் உடன்படிக்கையொன்று கைச்சாத்தானது.
ஆயினும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த துறவிமாரும் சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் தரப்பும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதால், கடைசியில் தலைமை அமைச்சர் பண்டாரநாயக குறித்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து அதனைத் தாம் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கவேண்டி ஏற்பட்டது. அதன்மூலம் ஆரம்பத்திலேயே தீர்த்துவிடக் கூடியதாயிருந்த இனப்பிரச்சினைச் சிக்கலை மென்மேலும் வளர்ச்சியடைய அனுமதிக்கும் பின்னணியை உருவாக்கிக் கொள்ள நேர்ந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தை வாய்ப்பாகக் கருதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உள்ளிட்ட ஐ.தே.கட்சித் தலைவர்கள் பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டிக்குப் பாதையாத்திரையை மேற்கொள்ளும் திட்டத்தைச் செயற்படுத்தினர். உண்மையில் அது மொழியை அரசியல் ஆயுதமாகக் கொண்டு அரசியல் பிரபல்யம் தேடிக்கொள்ளும் குறுக்குவழி உபாயமாகக் கொள்ளத்தக்கதே. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தாம் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தவறானவை என்பதை ஜே.ஆர் உணர்ந்து கொண்டார். 1987ஆம் ஆண்டில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் இடம்பெற்ற உள்நாட்டு, வௌிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவ்வேளைய அரச தலைவர் ஜே.ஆர், இலங்கையில் இனப்பிரச்சினை உருவாவதற்குத் தாமும் ஒரு காரணகர்த்தா என்பதை ஒப்புக்கொண்டிருந்தார்.
தொடர்ந்தும் இடம்பெற்ற இனப்பிரச்சினை தொடர்பான சிக்கல்கள், மோதல்களுக்கு ஒரு முடிவு காணும் நோக்கில் 1965ஆம் ஆண்டில் அவ்வேளையில் தலைமை அமைச்சர் டட்லி சேனநாயக மற்றும் செல்வநாயகம் ஆகியோருக்கிடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் அந்த வேளையில் எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவோ பண்டாரநாயக தலைமையில் பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள கடுங்கோட்பாட்டாளர்கள் என்போரும் இணைந்து டட்லி – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் மொழிகள் அரசியலின் துருப்புச் சீட்டாக ஆகி, முடிவில்லாத பிரச்சினையொன்றை நாட்டு மக்கள் தலைமீது சுமத்தி வைத்தன.
1987ஆம் ஆண்டில் இந்த நாட்டின் மொழிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் – ஜே.ஆர் ஒப்பந்தமென்ற இந்திய– இலங்கை ஒப்பந்தத்தை வழக்கம் போன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி போன்ற அரசியல் கட்சிகள் எதிர்க்க முயன்றன. குறித்த ஒப்பந்தத்தின் முக்கியமானதொரு அம்சமான மாகாணசபைகளை உருவாக்குவதைக் கடுமையாக எதிர்த்த அந்தத்தரப்பினர்கள், முதலாவதாக இடம்பெற்ற மாகாண சபை களுக்கான தேர்தலைப் புறக்கணித்த னர். பின்னர் தமது அத்தகைய புறக்கணிப்பைக் கைவிட்டு, அதன் பின்னரான மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அந்தத்தரப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
மொழியை அரசியலின் சம்மட்டியாக ஆக்கிக் கொண்ட எமது நாட்டின் அரசியல் வரலாற்றின் உள்ளீடு இவையேயாயினும், மொழியைத் தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளவும், அரசியல் பிரபல்யம் தேடிக் கொள்ளவும் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் பலபேர் இன்றும் எம்மத்தியில் உள்ளனர். மொழியை முன்னிறுத்தி இனவாதத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் அரசியலரங்கில் தத்தமது அதிகாரங்களை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்வதே இத்தகைய அரசியல்வாதிகளது எதிர்பார்ப்பாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!