சிஐடி மீது நம்பிக்கையில்லை- வெளிநாட்டு நிபுணர்களை அழைக்கப் போகிறாராம் ரத்தன தேரர்!

சி.ஐ.டியின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ்.திசேரா, வைத்தியர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினால் ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

குருணாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபி தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற என விஷேட வைத்தியர் தன்னிடம் குறிப்பிட்டதாக திசேரா மன்றில் தெரிவித்தார். அந்த விஷேட வைத்தியர் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

முரண்பாடான கருத்துக்களினால் சி.ஐ.டியின் மீதான நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டியின் உயர் அதிகாரிகள் முதலில் இவர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் தலையீடுகளினாலேயே சுயாதீன விசாரணைகள் இடம்பெறவில்லை. இவ்விவகாரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பிரதான வைத்திய பிரிவு இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்தியாவிலுள்ள சிறப்பு வைத்திய நிபுணர்களை இலங்கைக்கு வரவழைத்து சுயாதீன பரிசீலனைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!