‘செல்பி ’ எடுக்க முயன்றபோது ரெயில் மோதி பலியான கல்லூரி மாணவர்!

தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட சாதனங்கள் இன்று தவறான பயன்பாட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் செல்போன்கள் மூலம்தான் அதிகம் பாதிப்புகள் ஏற்படுகிறது. செல்போன் மூலம் செல்பி, டிக்-டாக் போன்றவை தற்போது அதிக அளவு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் டிக்-டாக் மோகத்தில் கணவன் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். அவர் வி‌ஷம் குடிப்பதையும் டிக்-டாக்கில் பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தநிலையில் புதுக்கோட்டை அருகே செல்பி மோகத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரெயில் முன்பு நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ரேவதி. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். இதில் 2-வது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மணிகண்டனின் நண்பருக்கு பிறந்தநாள். இதை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். இதற்காக நேற்று முன்தினமே பீர்பாட்டில்களை வாங்கி வைத்திருந்தனர். நேற்றுக் காலை வழக்கமாக செல்லும் பூசத்துறை வெள்ளாற்று ரெயில்வே பாலம் அருகில் பிறந்தநாளை கொண்டாடினர். ரெயில் தண்டவாளம் அருகே நண்பர்களுடன் பீர் அருந்திக்கொண்டு இருந்த மணிகண்டனுக்கு ரெயில் வரும் சத்தம் கேட்டதும், அதன் அருகில் நின்று செல்பி எடுக்கும் ஆசை ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் வந்தது. உடனே மணிகண்டனும் அவரது நண்பர் மகேந்திரனும் செல்போனில் செல்பி எடுக்க முயன்றனர். ரெயில் தண்டவாளத்தின் மிக அருகில் போதையில் நின்று கொண்டு செல்பி எடுத்தபோது எதிர்பாராதவிதமாக ரெயில் மணிகண்டன், மகேந்திரன் ஆகியோர் மீது மோதியது. இதில் செல்போனுடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்களுடன் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக நேற்று மாலை இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

மகேந்திரனுக்கு தொட ர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று செல்பி மோகத்தால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்களிலேயே பேஸ்புக்கில் இதுபோன்று செல்பி எடுக்கும்போது மலையில் இருந்து தவறி விழுந்து இறப்பவர்கள், அருவி முன்பு நின்று செல்பி எடுக்கும்போது உயிரிழந்தவர்கள், விலங்குகள் முன்பு நின்று செல்பி எடுக்க நினைத்து காயமடைந்தவர்கள், ரெயில் முன்பு செல்பி எடுக்க நினைத்து மரணத்தை தழுவியவர்கள் என காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் இது போன்று ஆபத்தான செல்பிகளை தொடர்ந்து இளைஞர்கள் எடுக்க நினைத்து ஆபத்தில் சிக்குவது அப்பாவி பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

மணிகண்டன் நண்பர்களுடன் செல்பி எடுக்க நினைத்த இடம் மிகவும் ஆபத்தான இடமாகும். அங்கு தனிமையான பகுதி என்பதால் பொதுமக்கள் யாரும் அதிகம் செல்வது இல்லை. மாணவர்கள், போதை ஆசாமிகள், தண்டவாளம் அருகில் அமர்ந்து இதுபோன்று உற்சாக பானம் அருந்தி பொழுதை கழித்து வருகிறார்கள். அப்போது பலர் இதுபோன்று செல்போன்களில் ரெயில் அருகில் நின்று படம் எடுப்பது, பாலத்தின் மீது ஏறி நின்று படம் எடுப்பது என்று அபாயகரமான விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அவ்வப்போது போலீசாரும், பொதுமக்களும் எச்சரித்தும் இளங்கன்று பயம் அறியாது என்பது போல் ஆபத்தோடு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டு இன்று ஒரு மாணவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்று விட்டது. எனவே இது போன்ற சம்பவங்களுக்கு பிறகாவது இளைஞர்கள், இளம்பெண்கள் ஆபத்தான செல்பி, டிக்-டாக் மோகத்தை கைவிட வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர்கள் போதையில் இருந்ததால் ரெயில் வேகமாக வருவதை சரியாக கணிக்க முடியாமல் இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாணவர் இறந்ததும் சக நண்பர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மணிகண்டனுடன் உடனிருந்த மாணவர்கள் யார், யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!