கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம.

தெரண தொலைக்காட்சி விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

”பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலிருந்து நான் நீக்கப்பட்டிருப்பதாக என்று கூறப்பட்டாலும், நான் ஒருபோதும் அந்தக் கட்சியின் உறுப்பினராக இல்லாததால் அத்தகைய நடவடிக்கை தேவையற்றது.

தாம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெயரளவிலான பதவிகளை விட்டு விலகி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளேன்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன மீதான அதிருப்தியினால், அப்போது நான் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்தேன்.

அதிபர் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை சிறிலங்கா பொதுஜன பெரமுன எனக்கு அறிவித்துள்ளது.

அதிபர் வேட்பாளராக, கோத்தாபய ராஜபக்ச இல்லாவிடின், மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.

ஓகஸ்ட் 11 ஆம் நாள் பெயரிடவுள்ள வேட்பாளரை நான் எதிர்க்கிறேன்.

நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும், சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உரிமை உள்ளது.

தேசிய உடை அணிபவரே அடுத்த அதிபராக வர வேண்டும். அதிபர் வேட்பாளராவதற்கு நானும் கூட தகுதியானவன் தான். அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது.

அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால், மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!