தேர்தல் விஞ்ஞாபனங்கள் மக்களை ஏமாற்றும் ஆவணங்களே!- விக்கி

விஞ்ஞாபனங்கள், அறிக்கைகள் எல்லாம் தேர்தல் காலத்தில் எமது மக்களை ஏமாற்றுவதற்காகத் தயாரிக்கப்படுகின்ற போலி ஆவணங்களே என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றிய போது,

2013ம் ஆண்டில் வடமாகாணத்தில் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட போது எனது பதவிக் காலத்தில் எமது மக்களுக்கு ஓரளவு சேவைகளை ஆற்றலாம் என்று நினைத்திருந்தேன். மனப்பூர்வமாகவும், இதயசுத்தியுடனும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக எனது கடமைகளை நிறைவேற்றி முடிக்கலாமென்றும் எதிர்பார்த்திருந்தேன்.

சிறிது காலம் சென்ற பின்பே எனக்கு உண்மைநிலை விளங்கியது. இந்த விஞ்ஞாபனங்கள், அறிக்கைகள் எல்லாம் தேர்தல் காலத்தில் எமது மக்களை ஏமாற்றுவதற்காகத் தயாரிக்கப்படுகின்ற போலி ஆவணங்கள் என்று தெரிந்து கொண்டேன்.

நாம் எந்தக் கட்சி சார்ந்து தேர்தலில் நின்றோமோ அந்தக் கட்சி கூட மக்கள் நலன்களில் அக்கறை கொள்ளாது அரசுக்கு முண்டுகொடுக்கின்ற வேலையிலேயே குறியாக நின்றார்கள். பல கேள்விகளைக் கேட்டு அரசாங்கத்தைத் திணர வைக்க வேண்டிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் சுகபோக வாழ்க்கையிலேயே குறியாக இருந்தார்கள்.

எல்லாவிதமாகவும் பேசிப்பார்த்தேன். அந்தந்த நேரத்திற்கு ஏதோ சாட்டுப் போக்குகளைக் கூறி என்னை சமாதானப்படுத்தப் பார்த்தார்களே அன்றி அவர்கள் மக்கள் பக்கம் திரும்புவதாக இல்லை என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!