சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நளினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருமாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் “என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கிய, இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை.

27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மனுதாரர் நளினி, நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என கடிதம் வழங்கியுள்ளதாகக அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். நளினியின் விருப்பத்தை இந்த உயர்நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. தன்னுடைய வழக்கில் சட்டத்தரணி இல்லாமல் தானே ஆஜராகி வாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும்போது, அதை நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதேநேரம், நளினியை ஆஜர்படுத்தும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அரசு தரப்பில் கூறினாலும், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

எனவே நளினியை பாதுகாப்புடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும் சிறை விதிகளை மீறாமல், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவும் ஜூலை 5 ஆம் திகதி பகல் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியது.

அதன்படி நளினி ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!