ரொறொன்ரோவில் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் கமராக்களை மறைத்து வைத்த நபர் கைது!

ரொறொன்ரோவில் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் கமராக்களை மறைத்து வைத்து பல பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்ரோவில் 22 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிரபல சிறப்பு அங்காடிக்குச் சென்று தனது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் இருபாலாருக்கும் பொதுவான உடை மாற்றும் அறை ஒன்றில் வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் சிறு கருவி ஒன்றை மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

சட்டப்பிரச்சினை காரணமாக பெயர் வெளியிட முடியாத குறித்த நபர், ஔிப்பதிவு கருவியை அந்த அறையில் வைத்துவிட்டு வந்தபின், அங்கு உடைமாற்றச் சென்ற ஒரு பெண் கருவியைப் பார்த்து சந்தேகமடைந்து பொலிசாரையும் அங்காடியின் பாதுகாவலர்களையும் அழைத்துள்ளார்.

பொலிசார் அங்கு விரைந்து சென்று ஔிப்பதிவுக் கருவியை பரிசோதித்தபோது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேகநபரை கைதுசெய்துள்ள பொலிசார், அவர் மீது பெண்களுக்கு தெரியாமல் உடை மாற்றுவதை காணொளி பதிவு செய்தமைக்கான 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளதோடு, சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!