12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரே மாதிரியாக பார்த்து எழுதிய 959 மாணவர்கள்!

குஜராத் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 959 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரேமாதிரியாக காப்பியடித்தது தெரிய வந்துள்ளது. காப்பியடித்தல் புகார் தொடர்பாக குஜராத் முதல் நிலை மற்றும் மேல் நிலை கல்வி வாரியம் விசாரணை நடத்தியது. அப்போது 959 மாணவர்கள் பல கேள்விகளுக்கு ஒரேமாதிரியான வார்த்தைகள், வாக்கியங்கள் என்ற ரீதியில் ஒரே மாதிரியாக பதில் எழுதியிருந்தது தெரியவந்தது.

ஜுனாகத் (Junagadh), கிர் சோம்நாத் (Gir-Somnath) மாவட்டங்களில் உள்ள சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இந்த மாணவர்கள் எவ்வாறு ஒரே மாதிரியாக தவறாக தேர்வு எழுதியிருக்க முடியும் என கேள்வி எழுந்தது.

அந்த மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தேர்வறையில் இருந்த ஆசிரியர்கள் வாயால் கூறியதை தாங்கள் எழுதியதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கணக்குப் பதிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களில் காப்பியடித்ததாக புகார் எழுந்த நிலையில் அந்தப் பாடங்கள் தொடர்பான 959 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!