ஹோர்முஜ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல் மாயம்?!…

ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீரென மாயமானது பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் இருந்து புஜைரா துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரியா எனப்படும் அந்த எண்ணெய் கப்பல் கடந்த சனிக்கிழமை இரவு மாயமானதாக தவகல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான படகுகள் கைப்பற்ற முயற்சித்தாக அமெரிக்கா குற்றம் சாட்டியதும், ஈரான் அதனை மறுத்ததும் நினைவுகூரத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!