ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர் தீ வைத்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டது.

இந்த ஸ்டூடியோவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் மர்ம நபர், கட்டிடத்தை சுற்றி பெட்ரோல் போன்ற திரவத்தினை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அந்த கட்டிடம் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 70 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். தீ மளமளவென பரவியதில் கட்டிடம் முழுவதும் எரிந்துள்ளது. இதில் உடல் கருகி 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களுள் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஒருவரை கஸ்டடியில் வைத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!