பதவி ஏற்க மறுத்தால் 7 ஆண்டு தடை!

அரச பதவிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான நியமனங்கள் வழங்கப்படும் போது தாங்கள் விரும்பிய இடத்துக்கு நியமனம் கிடைக்கவில்லை என்பதால், வழங்கப்பட்ட இடத்துக்கு செல்லாமல் இருப்போருக்கு ஏழு வருடங்களுக்கு எந்த அரச உத்தியோகமும் வழங்கப்படாது என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு தீர்மானம் வட மாகாணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 77 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களும், 3 பேருக்கு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களும், 9 நபர்களுக்கு தகவல் தொழில் நுட்ப ஆசிரியர் பதவிகளுக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தொடர்ந்து உரையாற்றுகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை நீங்கள் பெறுகின்றீர்கள் இவ் நியமனத்தை பெறும் நீங்கள் உங்கள் கடமைகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

இவ் பதவிகளுக்கான நியமனம் இது ஐந்தாவது தடவையாக வழங்கப்படுகின்றது. இவ் பதவிகளைப் பெறுவோர் ஒழுக்கத்துடன் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். இந் நியமனத்தை பெற்றவுடன் அடுத்து நீங்கள் செய்வது என்னவெனில் உடன் இடமாற்றம் கோருவது. சிலர் நியமனத்தை பெற்று ஒரு மாத காலமாக நியமிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாது இருப்பது. குறிப்பிட்ட இடங்களுக்கு போகாமல் இருப்பதை அறிந்து ஒன்றரை மாதத்துக்குப் பின்தான் இவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லையென்று எமக்கு தெரியவரும்.

உங்களுக்கு பரீட்சை வைத்து பின் நேர்முகப் பரீட்சை வைத்து அதிகாரிகள் உங்களுக்காக தங்கள் நேரங்களை செலவழித்து இருந்தாலும் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிப்பதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!