நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் 5 பேர் பலி – 23 பேர் மாயம்!

நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று அதிகாலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். தடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நேபாள ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் கணவன், மனைவி உள்பட 5 பேரை பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த கோர விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!