பலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி?

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுபாதை விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுபாதை விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை அமைக்க முடியும் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை. நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுபாதை அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!