மஹிந்தவிற்கு வழங்கிய ஆதரவினை தனக்கும் வழங்க வேண்டும் ; கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனைத்து நிலைகளிலும் வெற்றிப் பெறுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பினை தனக்கும் வழங்க வேண்டும். அனைவரது எதிர்பார்ப்பிற்கு அமைய ஆட்சி மாற்றம் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மெதமுல்ல பல்லேடுலன ஸ்ரீ தர்ம கிரி கிராவ விகாரையில் மத வழிபாட்டில் இன்று சனிக்கிழமை காலை ஈடுப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பின்னர் மெதமுல்லயில் உள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு சென்று தமது பெற்றோரின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ,

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை தெரிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். பல நெருக்கடிகளின் போது வெற்றியினை காண்பதற்கு மத தலைவர்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவினை வழங்கியுள்ளார்கள். இந்த ஆதரவினை தனக்கு வழங்குவது அவசியமாகும்.

ஆட்சி மாற்றமே இன்று அனைவரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. புதியதொரு பயணத்தை நோக்கி செல்வதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். ஒருமித்து செயற்பட்டால் மாத்திரமே இலக்கினை அடைய முடியும். என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!