தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நேற்றுடன் அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக கடுமையான இழுபறி தோன்றியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இறுதிப் போர்க்கால, சர்ச்சைக்குரியவரான அவருக்கு பதவிஉயர்வு அளிக்கப்படுவது பல்வேறு தரப்பினருக்கும் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு, அதிபர் சிறிசேன தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை, ஐதேகவும் இந்த விவகாரத்தில் முரண்பட்டு நிற்கிறது.

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு, ராஜபக்ச பிரிவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகிறதா என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்படாததால், இராணுவத் தலைமை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இலங்கை இராணுவம் தற்போது இருந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!