இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது

நிதியமைச்சராக பணியாற்றியவேளை ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகளால் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கைசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் ஊடக முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தவலை வெளியிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். ஊடக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் பிணை மனுவை டில்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக டில்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை.

இந்நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ மனு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்தப்படாததால் ப.சிதம்பரத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது. நேற்று இரவு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீட்டுக்கு சென்ற ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

ப.சிதம்பரத்திடம் இன்று காலை முதலே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இன்று பிற்பகல் டில்லியிலுள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் பிணை மனு தாக்கல் செய்யப்படும். அதேசமயம், ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்படலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!