நியூசிலாந்து பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்

நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் எரிபொருள் விலைபற்றிய கடுமையாக விவாதம் நிகழ்து கொண்டிருந்த போது சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிய சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தொழிலாளர் கட்சி உறுப்பினரான டமாட்டி கோஃபி மற்றும் அவரது கணவர் டிம் ஸ்மித் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த ஆண் குழந்தை ஸ்மித்- கோஃபி இவர்கள் தமது குழந்தையுடன் நேற்று பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றினர்.

பாராளுமன்ற அலுவல்கள் நடைபெற்று கொண்டு இருந்த போது குழந்தையை வாங்கிய சபாநாயகர் டிரெவோர் மலார்ட், குழந்தைக்கு பால் போத்தலின் மூலம் பால் ஊட்டினார். பின்னர் தனது இருக்கையை அசைத்து குழந்தையை தட்டிக்கொடுத்து கவனித்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை அவரே டுவிட்டரில் பகிர்ந்து அதில் “பொதுவாக சபாநாயகர் நாற்காலியை பதவியில் இருக்கும் நபர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இன்று ஒரு விஐபி என்னுடன் அதை பகிர்ந்து கொண்டார், எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த பதிவுகளுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்,

குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட மலார்ட், கடந்த 2017ஆம் ஆண்டு மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான வில்லோவ் ஜீன் ப்ரைம்மின் குழந்தையை இதே போன்று பாராளுமன்றத்தில் கவனித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.