அமெரிக்காவில் நெஞ்சை நொறுக்கும் சம்பவம் – திருமணம் முடிந்ததும் உயிரிழந்த சோகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் (வயது 19). இவரது காதலி பவுட்ரியாக்ஸ் (20). சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி டெக்சாஸ் மாகாணத்தின் ஆரஞ்சு நகர கோர்ட்டில் நீதிபதியின் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் திருமணத்துக்கான சான்றிதழில் இருவரும் கையெழுத்திட்டுவிட்டு கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர். கோர்ட்டுக்கு வெளியே திரண்டிருந்த மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.

அதனைத் தொடர்ந்து, மணமக்களுக்காக கோர்ட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவரும் ஏறினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று மணமக்களின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நான்கைந்து முறை சாலையில் உருண்டு, சாலையோர புதரில் விழுந்தது. இந்த கோர விபத்தில் குடும்பத்தினர் கண்முன்னே மணமக்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

இது குறித்து மோர்கனின் தாயார் “அவர்களது திருமண பந்தம் 5 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. அந்த 2 குழந்தைகளும் விரும்பிய ஒரே விஷயம், திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதுதான். அவர்கள் இருவருக்கும் பல கனவுகள் இருந்தன” என்று கண்ணீர் மல்க கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!