முன்னர் பல சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை விட, இந்தத் தடவை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதொன்றாக அமைந்தது. அதன் முடிவு தற்போது வெளியாகிவிட்டுள்ளது. அதனது பின்னணியும் ஆச்சரியமானதொன்றே.
இது விடயத்தில் இரகசியமான செயற்பாடுகள் சிலவும் அரங்கேறியிருந்தன. வெளிப்படையாகத்தோன்றாத, உள்ளுக்கும் பெருந் தீச்சுவாலையாகப் பற்றியெறிந்த, கட்டுக்கள் தளர்த்தப்பட்ட செயற்பாடுகள் சில அரங்கேறியிருந்தன.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்தொடர்பில் கூட்டு எதிரணியினது கருத்துக்கள்
கடந்த மூன்றாம் திகதியன்று, நம்பிக்கையில்லாத் தீர்மானமென்ற மேடைநாடகக் காட்சிகள் நாடகத்தின் கதை வசன கையெழுத்துப் பிரதிகளுக்கு அமைவாக அல்லாது, திடீரென மேடையில் அரங்கேறிய காட்சிகளாக அரச தலைவர் மைத்திரிபாலாவின் வழிநடத்தலில் நடந்து முடிந்தன.
நாட்டையே நாசமாக்கும் இந்த அரசை அதிகாரத்திலிருந்து அகற்ற, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணையுங்கள். பெரும் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவது உறுதி எனக் கர்ச்சித்தார் பொது எதிரணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன.
மகிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திடாவிடினும், எதிர்வரும் 5ஆம் திகதி சூரியன் உதிக்கும் வேளை இந்த அரசு வீழ்ச்சி கண்டிருக்கும் எனக் கொக்கரித்தார் விமல் வீரவன்ச. மதிப்போடு தமது பதவியைத் தாமாக கைவிடுவதைத் தவிர ரணிலுக்கு வேறு மார்க்கமேதுமில்லை என ஆவேசமாகக் குரல் எழுப்பினார் உதய கம்மன்பில.
மேற்கண்டவை யாவும் கடந்த இரண்டாம் திகதிவரை கூட்டு எதிரணி முக்கியஸ்தர்கள் வெளியிட்டு வந்த கருத்துக்களாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்க ளும் பிரேரணைக்கு ஆதரவளிப்பார்களா? எதிர்ப்பார்களா? என்பது உறுதியாகாதிருந்த போதிலும், பிரேரணை விவாதத் துக்கு எடுக்கப்படுவதற்கு முன்னரேயே, முஸ்லிம் காங்கிரஸ் அதனை எதிர்ப்பதென முடிவு செய்து விட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஒரு போதும் இரு தரப்புக்களாக பிரிந்து வாக்களிக்கமாட்டார்கள் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து தலைமை அமைச்சர் ரணிலுடன் கலந்துரையாடி தீர்வுகண்டுவிட முடியுமென கூட்டமைப்பினர் மத்தியில் நம்பிக்கை நிலவியது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே ரணிலுக்கு எதிரான கருத்தைக் கொண்டி ருந்ததுடன், தமிழ் மக்களது எதிர்கால நல்வாழ்வு குறித்த விடயமே அதில் முக்கி யத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
ஆயினும் மகிந்தவின் கூட்டு முன்னணித் தரப்பு ரணிலுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க இயலாத சிறைப்பட்ட நிலை விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருந்தது. ஆதலால் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதைவிட, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக, பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை தமிழர் தரப்புக்கு ஏற்பட்டிருந்தது.
தலைமை அமைச்சருக்கு எதிராகச் செயற்பட்ட ஐ.தே.கட்சியினர்
ஆதலால் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பினதும், முஸ்லிம் காங்கிரஸினதும் ஆதரவைப் பெற ரணிலின் தரப்பினர் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டனர். ஆயினும் குறித்த இரு தரப்பினர்கள் எத்தகைய முடிவை மேற்கொள்ளக்கூடுமென்பதில் நிச்சயமற்ற தன்மையும் நிலவியது.
முஸ்லிம் காங்கிரஸின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்த்திடத் தக்கவையாக இருந்ததால், ரணில் தரப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைத் தம்பக்கம் ஈட்டிக்கொள்ள வாய்ப்புக்கிட்டியது.
குறித்த இரு தரப்பினரது ஆதரவும் ரணிலுக்குக் கிட்டவுள்ளதாக நம்பப்பட்ட நிலையில், ஐ. தே. முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐ. தே. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரது செயற்பாடுகள், அவர்களது கருத்து வெளிப்பாடுகள் ரணிலை விமர்சிக்கும் வகையில் அமைந்தமை ரணிலுக்குத் தலைவலியை ஏற்படுத்தக்காரணமாகின.
அந்தக் குழுவில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகவும், அவர்களை ரணிலுக்கு எதிராக வழி நடத்துவது ரத்ன தேரரே எனவும் தகவல்கள் வெளியாகின.குறித்த குழுவினர் குறித்த அவதானமாக இருக்குமாறும், ஐ. தே.கட்சிக்கு விசுவாச மான ஏனைய ஐ. தே. கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்களை இந்த குழு வினர் தமது பக்கத்துக்கு இழுத்துக்கொள்ள இடமளிக்காமல் கவனம் செலுத்துமாறும் ரணிலுக்கு கடும் ஆதரவு வழங்கும் ஐ. தே. கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்து வந்தது.
அத்தகைய நிலைப்பாட்டை எவ்விதம் கையாள்வது என்பது குறித்து குழப்பமடையும் நிலைக்கு ரணில் தள்ளப்பட்டார். அவருக்கு அடுத்தடுத்து வந்த எச்சரிக்கைகள் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
ஆயினும் இவற்றுக்கு மத்தியில் ரணிலை குறித்த சவாலில் வெற்றிபெற வைக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லாத ஐ. தே. கட்சியின் ஆதரவாளர்களான பலரும் ஈடுபட்டிருந்தனர்.
அத்தகைய ஐ. தே. கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் தரப்பு, கட்சியின் புனரமைப்பு என்ற விடயத்தை முன்வைத்து, அதையொரு சாட்டாகக் கொண்டு, வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்தல், மற்றும் ரணிலுக்கு எதிராக வாக்களித்தல் போன்ற நிலைப்பாடு களிலுள்ள ஐ. தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரெவரெனத் தாம் இனங்கண்டிருப்பதாகவும், அவர்களுடன் பேசி அவர்களை தமது பக்கம் திருப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ரணிலுக்கு அறிவுறுத்தியது.
ரணிலின் வெற்றி குறித்து அச்சம் கொண்டிருந்த
மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சிலர்
இதனிடையே மகிந்த தரப்பில் மகிந்தவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர், ரணில் எப்படியாவது தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து விடுவார் என்ற ஐயத்துடன் தமக்குள் கருத்துப் பரிமாறிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. அதேவேளை குறித்த சவாலில் ரணிலைக் காப்பாற்ற முன்னின்ற இளம் ஆதரவாளரொருவர் ‘‘இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க எவருமே எதிர்பாராத சக்தியொன்று உதவி செய்யக்கூடும்.
பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் சமயமே, அது குறித்துத் தெரிய வரும். அவர்கள் மௌனமாக இருந்து கடைசி நிமிடத்தில் வேலையைக் காட்டுவதை பார்க்கத்தான் போகிறோம். அவர்கள் அவ்விதம் ரணிலை காப்பாற்றினால் நாம் அவர்களைப் பாதுகாப்போம். எமது புதிய பயணத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்வோம். அந்த வகையில் அவர்கள் எதிர்காலத்தில் ஐ. தே. கட்சியின் உயர் பிரமுகர்க ளாக ஆகவும் இடமுண்டு எனவும் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பின்னணியில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 120 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு வாக்குகள் கிட்டுமென ரணிலுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அது குறித்து பூரண நம்பிக்கை வைக்காத ரணில், எதிர்பாராத இடத்தில் தவறு ஏற்பட்டு விடுமானால், மேலதிக நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவை முற்கூட்டியே தேடி எம்மை நாம் பலப்படுத்திக் கொள்வது சிறப்பு எனத் தெரிவித்து, வேறு எந்தத் தரப்பினது ஆதரவையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்குமானால் அதனையும் முயற்சித்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவைத்தார்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்குள் வைத்திருந்தார் ரணில்
ரணில் குறித்த சவாலில் வெற்றிபெற வைக்கப்போராடிய ரணிலின் தீவிர ஆதரவாளர் தரப்பு, நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தினத்தன்று, நாடாளுமன்ற ‘’ லொபி ‘’யில் பிரவேசித்தபோதே ரத்னதேரர் ரணிலுக்கு எதிராகச் செயற்பட இருப்பதைத் தடுத்திட இயலாதென்பதை உணர்ந்து கொண்டனர்.
சில வேளை அவர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்க்கக் கூடுமெனக் கருதினர். ஆனால் ஐ.தே.கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது தமக்கு எதிராகச் செயற்படுவாரா? என்ற ஐயம் ரணிலின் மனதில் நிலவியது. தமக்கெதிராகச் செயற்படக்கூடுமென சந்தேகப்படும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் மீண்டும் பேசி அவர்களது மனங்களைத் தமது பக்கம் திருப்புமாறு கிடைத்த அறிவுறுத்தலை முறைப்படி ரணில் கையாண்டு தமது முயற்சியில் வெற்றி கண்டார்.
ரணிலுக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் சில எதிர்த் தரப்பு மைத்திரிபால ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறித்த விடயத்தில் மைத்திரபால குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்களிப்பு வழங்குவதாக ரணிலுக்குத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் கூட்டரசொன்றை உருவாக்க முக்கிய பங்காற்றிய சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சுயாதீனமாக செயற்பட முடிவு செய்தமை குறித்த தகவல் அரச தலைவர் அறிந்திராத ஒன்றல்ல.
அரச தலைவர் மைத்திரிபாலவோ தமக்கு விருப்பமான விதத்தில் பெரும்பாலான சுதந் திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிப்பைப் பகிஷ்கரிக்க வைப்பிப்பதன் மூலம், நம்பிக்கையில்லாப் பிரேரணைளைச் சிரமமான சிக்கலான நிலைக்கு இட்டுச்செல்வதற்கே ஆர்வம்காட்டிச் செயற்படுவதாக சுதந்திரக்கட்சியின் நடுநிலை நிலைப்பாடு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதினர். இந்தச் செய்தி ரணிலுக்கு உடனுக்குடன் கிட்டிவந்தமை அரச தலைவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
ஆயினும் அரசில் அங்கம் வகித்துக் கொண்டே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதால், அத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் பின்னர் தொடர்ந்தும் அதே அரசில் இருப்பது குறித்து, பிரேரணையை எதிர்க்கும் தரப்பினர் ஆட்சேபனை தெரிவிப்பது சட்டப்படி செல்லுபடியற்றதென்பது சட்ட வல்லுநர்களது கருத்தாக அமைந்திருந்தது.
உண்மையில் அரசு என்பது அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையால் நிர்வாகிக்கப்படும் நிறுவனமாகும். அந்த நிலையில், தலைமை அமைச்சருக்கு எதிராக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதென்பது ஒட்டுமொத்த அரசையும் கவிழ்க்க முயலும் செயற்பாட்டை ஒத்ததாகும்.
அத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் தொடர்ந்தும் அரசில் அங்கம் வகிக்க அனுமதிக்க முயற்சித்தால், அது நியாயமானதொன்றல்ல. சட்டப்படியாக இத்தகைய புதிய மோதலை முறியடிக்க இயலும். அந்த வகையில் புதிய சட்ட மூலத்தை உருவாக்கும் வழக்குத் தீர்ப்பு கிட்டக்கூடும். ஆதலால் அரசுக்கு எதிராகச் செயற்படும் அமைச்சர்களை உள்ளடக்காமலே அரசு தொடர்ந்து செயற்படவேண்டி ஏற்படும் எனவும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த வகையில் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஏதோ ஒரு விதத்தில் தப்பிப்பிழைத்துக் கொண்ட ரணில், தற்போது தமக்கெதிராக செயற்பட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பழிவாங்கும் வகையில் செயற்படாது கட்சி மட்டத்தில் எழும் கோரிக்கைகள், தமது ஆதரவாளர்கள் தரப்பு மட்டத்தில் முன்வைக் கப்படும் கோரிக்கைகள், நாடளாவிய ரீதியில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்குக் காது கொடுத்து இளம் பரம்பரையினரை அரசியலில் முன்னணிக்குக் கொண்டு வரத்தக்க வகையிலான கட்சிப் புனரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. அவ்வித செயற்பாடுகளில் ஈடுபட ரணில் தவறுவராயின் அவர் அரசியலில் போர்க்கிடமற்றதொரு பாரதூர நிலைக்கு உட்பட நேரிடுமென்பது நிச்சயமானதே.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!