எழுக தமிழ்- முழு அடைப்புக்கு அழைப்பு!

வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழர் தாயகம் தழுவிய ரீதியாக, முழு கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக எழுக தமிழ்-2019 மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்.மண்ணில் நடைபெறவுள்ளது.

எனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பவற்றை மூடியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் மீனவர்கள் தமது தொழிலுக்குச் செல்லாதும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

அதேவேளை, அத்தியாவசிய, அவசர தேவை நிமித்தம் பயணிப்பவர்களதும், எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று திரும்புபவர்களினதும் தேவைகளை ஈடு செய்யும் வகையிலான மருந்தகங்கள், வண்டி வாகன திருத்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவை வழமைபோன்று இயங்குவது அவசியமென்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையில் அணியமாகும் வகையில் அன்றைய தினம் வழமை மறுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது. ஒவ்வொரு தமிழர்களது கடமை என்பதனை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!