நடுரோட்டில் பற்றி எரிந்த கல்லூரி பேருந்து – உயிர்தப்பிய மாணவர்கள்!

தாம்பரம் அருகே நடுரோட்டில் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது. தீப் பிடித்தவுடன் அலறியடித்து இறங்கியதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர், தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் அன்னை வேளாங்கண்ணி என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்தபின்னர் தேனாம்பேட்டை மார்க்கமாக செல்லும் கல்லூரி பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். பஸ்சை நாகப்பன் (52) என்பவர் ஓட்டினார். வண்டலூர் அருகே உள்ள இரணியம்மன் கோவில் அருகே நடுரோட்டில் பஸ் வந்தபோது பஸ்சின் முன்பக்கத்தில் இருந்த ‘ரேடியேட்டரில்’ இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் அலறியடித்து இறங்கினர். பின்னர் ‘ரேடியேட்டரில்’ தண்ணீர் ஊற்ற முயற்சித்தனர்.

தீப்பிடித்து எரிந்தது

ஆனால் அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து மாணவர்கள் சாலையோரம் இருந்த மண்ணை எடுத்து வீசி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் பஸ் மள மளவென எரியத்தொடங்கியது. இதனையடுத்து மாணவர்கள் சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

உயிர்தப்பிய மாணவர்கள்
மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கிய அவசரத்தில் புத்தகப்பைகளை பஸ்சிலேயே விட்டுவிட்டதால் பஸ்சுடன் சேர்ந்து பைகளும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீவிபத்தால் வண்டலூரில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்சில் புகை வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!