மைத்திரியை கைவிட்டு வந்தால் தான் ‘மொட்டு’ கட்சியில் இடம் – பீரிஸ் நிபந்தனை

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையைக் கைவிட்டு வந்தால் தான், சிறிலங்கா அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவுள்ள நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த நிபந்தனையை விதித்துள்ளார்.

“ அவர்களை பொதுஜன முன்னணி வரவேற்கிறது. ஆனால், அவர்கள் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கட்சிக்கு ஒரு தலைவர் தான் இருக்க முடியும். இரண்டு பேர் இருக்க முடியாது.

மகிந்த ராஜபக்சவின் தலைமையையும், பொதுஜன முன்னணியின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மாத்திரமல்ல, வேறு எந்தக் கட்சியினராக இருந்தாலும் எமது கதவுகள் திறந்தே இருக்கும்.

எதிர்காலத்தில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும், பொதுஜன முன்னணி, தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!