கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை!

மத்தியகுழுவின் அனுமதியின்றி ஒருவரின் கட்சி உறுப்புரிமையை நீக்கமுடியாது என்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம்.பௌசி, லக்ஷ்மன் யாப்பா, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக சு.க பொதுச் செயலாளர் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார். விரைவில் மத்திய செயற்குழு கூடிய அவர்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படுமெனவும், சிலவேளை கட்சி உறுப்புரிமை நீங்கியவர்களது பாராளுமன்ற பதவியும் கேள்விக்குறியாகலா மெனவும் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட எஸ்.பி.திசாநாயக்க, எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது. கட்சியின் செயற்பாட்டிலிருந்து எம்மை தடை செய்ய முடியுமே ஒழிய உறுப்புரிமையை இல்லாது செய்ய முடியாது.

அதுவும் இந்த அதிகாரம் கட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது. மாறாக, இதற்கான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்கு கிடையாது. அவ்வாறு நீக்க வேண்டுமெனில், மத்திய செயற்குழுவின் அனுமதி அதற்கு அத்தியாவசியமாக இருக்கிறது. ஆனால், எமக்கு தெரிந்தவகையில் அண்மைக் காலமாக மத்தியக் குழுக் கூட்டம் நடைபெறவில்லை. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில்கூட, எமது தரப்பு நியாயங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.

நாம் எமது தன்னிலை விளக்கத்தை மட்டும்தான் இதுவரை குறிப்பிட்டுள்ளோம். எவ்வாறாயினும், மத்தியக் குழுக் கூட்டத்தில் மட்டும்தான் எமது உறுப்புரிமையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!