சஜித்துடன் இணைந்து கோத்தாவை தோற்கடிப்போம் – அஜித் பி.பெரேரா

சஜித்துடன் இணைந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷவை தோற்கடிப்போம் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் ஏகமனதான விருப்பத்துடனேயே ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார். பங்காளி கட்சிகளும் சஜித்துக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள். சஜித் வேட்பாளராக களமிறங்குவதற்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது கட்சியின் கொள்கையாகும். அது வேட்பாளரின் தனிப்பட்ட கொள்கையும் இல்லை. நாங்கள் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போதே மக்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி விட்டோம். ஆகவே அரசியலமைப்பின் முழு மாற்றத்துடன் நிறைவேற்று அதிகாரத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

மேலும் எதிர்வரும் காலத்தில் பொதுஜன பெரமுன உள்ளிட்ட அநேகமான கட்சிகள் எங்களுடன் இணைவார்கள். தேர்தல் வேட்பமனு தாக்கலின் பின்னர் எங்களின் சின்னத்தை அறிவிப்போம். தற்போதைய அளவில் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ உள்ளிட்டோர் எங்களுடன் இணைந்துள்ளார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!