சிங்கள வாக்குகளால் வெல்லக் கூடியவர்கள் வடக்கில் ஏன் மண்டியிடுகின்றனர்?

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கிளிநொச்சியில் தமிழ் மக்களைச் சந்தித்தபோது தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்துவதாக அமைந்திருப்பதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான தெரிவித்தார்.

ஜனநாயக தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

தெற்கில் சிங்கள பௌத்த மக்கள் 73 சதவீதத்தினர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றனர். வடக்கு தமிழ் மக்களும் கோத்தாபயவுக்கு வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்தல் விடுக்கும் தொனியில் உரையாற்றியுள்ளார். இது சிறுபான்மை மக்களை அச்சமூட்டும் செயற்பாடுகளில் ஒன்றாகவே நாம் காண்கின்றோம்.

மொட்டுத் தரப்பினர் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவிதமாகவும், வடக்கு கிழக்கில் வேறுவிதமாகவும் இரட்டை நாக்குகளில் பேசி வருகின்றனர்.

சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் எமது வெற்றிக்குத் தாராளமாக போதும் என்று கூறுபவர்கள், வடக்கில் எதற்காக மண்டியிடுகின்றனர் என்பது புரியவில்லை.

2015ல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய அதே தீர்ப்பைத் தான் நவம்பர் 16ல் கோத்தாவுக்கும் நாட்டு மக்கள் வழங்கவுள்ளனர். மொட்டுத் தரப்பிலிருந்து பலர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். வேட்புமனுதாக்கல் செய்த மறுதினமே பலர் எம்முடன் இணைய விருக்கின்றனர். மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் பலரும் இராணுவ வீரருக்கு ஆதரவளிக்க முடியாதென பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்னரே தனது இராணுவ அதிகாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அவரோடு இணைந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் அணியே பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை அவரிடம் காண முடியாதுள்ளது. அடுத்து வரும் நாட்களில் தங்கிருந்து பலர் வெளியேறவிருக்கின்றனர்.

ஜனநாயக அரசியல் மீது நம்பிக்கை வைத்து செயற்படும் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. 2015ல் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றிக்கு அணிதிரண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் சஜித்தின் வெற்றிக்காக உத்தரவாதமளித்திருக்கின்றனர். ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்குடையவர்களை நிச்சயமாக மக்கள் நவம்பர் 16ல் மீண்டுமொரு தடவை படுதோல்வியடையச் செய்பவர் எனவும் அர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!