இன்று காலை வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து, வேட்புமனுக்கள் இன்று காலை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இன்று காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்பாளர்கள், தமது வேட்புமனுக்களை தேவையான ஆவணங்களுடன் இணைந்து தேர்தல்கள் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்ப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை இன்று காலை 9 மணியில் இருந்து 11.30 மணிக்குள் தேர்தல்கள் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 19 சுயேட்சை வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்படாத 3 அரசியல் கட்சிகளின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர், எதிர்ப்பு மனுக்களையும், வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்த பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடும்.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு, இன்று காலை 6 மணி தொடக்கம், நண்பகல் 12 மணி வரை ராஜகிரிய பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து ஒழுங்குகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!