கோவிலுக்குள் கொடூரமாக தாக்கிய கும்பலிடமிருந்து வாலிபரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிலில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய கும்பலிடமிருந்து போலீஸ் அதிகாரி தைரியமாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் ஜிரிஜியா கிராமத்தில் உள்ள கோவிலில் முஸ்லிம் வாலிபர் ஒருவர், இந்து பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினைச் சேர்ந்த கும்பல் இளைஞரை தாக்க தொடங்கினர். அதனை தடுக்க முயன்ற பெண்ணிடம், ஒரு இந்து பெண்ணாக இருந்து கொண்டு முஸ்லிம் வாலிபருடன் பழகிக்கொண்டிருக்கிறார் என அந்த கும்பல் கூறியுள்ளது.

அப்போது கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கன்தீப் சிங் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் அந்த கும்பலிடம் இருந்து இளைஞரை காப்பாற்றி, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் சிலர் வாலிபரை மீண்டும் தாக்கினார். இதனால் கங்கன்தீப் வாலிபரை கட்டியணைத்து, அவருக்கு பதிலாக அடியை வாங்கிக்கொண்டார். பின்னர் வாலிபரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றார்.

இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கும்பலை பார்த்து பயப்படாமல் தைரியமாக வாலிபரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!