நாட்டில் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா அல்லது மக்களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்பாங்குடைய ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா என்பதை மலையக மக்கள் ஒப்பிட்டுபார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தன் நோர்வூட் பகுதி பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் வீ. மஞ்சுளா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம். உதயகுமார், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன், பிரதேச அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், எஸ். ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையக இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டில் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் இல்லாதிருந்த கால கட்டத்தில் சகலருக்கும் பிரஜாவுரிமை வழங்கி கௌரவத்துடன் வாழச் செய்தவர் அமரர் ரணசிங்க பிரேமதாச என்றால் அது மிகையாகாது. அத்தகைய மனிதாபிமானம் கொண்ட தலைவரின் புதல்வர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சாதாரண மக்கள் வசதியான வீடுகளில் வாழ வேண்டும் என்று வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு அனைவர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துள்ளார். அவர் இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக வந்தால் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதேநேரம், இந்த நாட்டில் யுத்தம் என்ற போர்வையில் அப்பாவி மக்களையும் தமிழ் மக்களையும் ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்க காரணமாக இருந்த கோத்தபாய ராஜபக் ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். அதில் மலையக அப்பாவி இளைஞர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பதை இந்த இடத்தில் நினைவுப்படுத்த வேண்டும். அதேபோன்று வெள்ளை வேன் கலாசாரமும் தலைவிரித்தாடியது. அவர்கள் காலத்தில் மக்கள் பட்ட கஷ்டங்களை முழு உலகமும் அறியும்.
அத்தகைய இருண்ட யுகம் மீண்டும் வர வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இன்று மலையகத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் அரசியல் ரீதியில் பேசப்படும் ஒரு பாரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. எமது அரசியல் செயற்பாடுகளுக்கு சேறுபூசும் வகையில் சில தனியார் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
எனவே, போலியான செய்திகளைக் கேட்டு ஏமாந்து விடாமல் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!