பங்களாதேஷைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்காக பட்டப்படிப்பு பரீட்சைகளை எழுதுவதற்கு 8 பதிலாட்களை வாடகைக்கு அமர்த்தியிருந்தமை அம்பலமானதையடுத்து அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
திறந்த பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டப்படிப்பை தொடர்ந்து வந்த ஆளும் அவாமி கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரான தமன்னா நுஸ்ரத்தே இவ்வாறு தனக்காக பரீட்சைகளை எழுத பதிலாட்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நர்ஸிங்டி அரசாங்கக் கல்லூரி பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பரீட்சையின் போது மேற்படி பதிலாட்களில் ஒருவரை தொலைக்காட்சி சேவையொன்று எதிர்கொண்டு தகவல் வெளியிட்டதையடுத்தே இந்தப் பரீட்சை மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. தமன்னா பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஆசனங்களில் ஒன்றை பெற்றுள்ளார்.
இதுதொடர்பில் இந்த மோசடியை அம்பலப்படுத்திய பங்களாதேஷின் நகோறிக் தொலைக்காட்சி சேவை தெரிவிக்கையில், கடந்த 4 தவணைகளுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் 13 பரீட்சைகள் இடம்பெற்றுள்ள போதும் அந்தப் பரீட்சைகள் எதற்கும் தமன்னா ஆஜராகியிருக்கவில்லை எனக் கூறுகிறது.
இந்நிலையில் தமன்னாவின் பல்கலைக்கழகத்திலான பதிவை இரத்துச் செய்துள்ளதாகவும் அவருக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சை எதனையும் எழுத அனுமதிக்கப்படாது எனவும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மான்னன் தெரிவித்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாக சபையானது மேற்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதனையும் எடுப்பதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தமன்னா 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலொன்றில் கொல்லப்பட்ட டாக்காவின் நர்ஸிங்டி பிராந்தியத்தின் மேயரான லோக்மான் ஹொஸைனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!